Thursday, December 25, 2014

டீசல் கார் VS பெட்ரோல் கார்.. எது சிக்கனம்?



இன்றைக்கு கார் எனபது வீட்டுக்கு வீடு முக்கியமான தேவையாகிவிட்டது.. ஒரு கார் ஏற்கனவே இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலம் பயன்படுத்திய பின் மாற்றம் செய்வதும் அவசியமாகி விட்டது..

புதிதாக கார் வாங்கும் போது நமக்கு தோன்றும் முதல் சந்தேகம் பெட்ரோல் கார் வாங்கலாமா, டீசல் கார் வாங்கலாமா என்பது தான்..

 எது சிக்கனம்?

என்னைப் பொறுத்த வரையில் இன்றை  டீசல் மற்றும் பெட்ரோல் மார்க்கெட் விலையில் பெட்ரோல் காரே சிக்கனம் ..

ஏன், எப்படி என்பதை பற்றி பார்ப்போம்..

அது எப்படி?? டீசல் விலை பெட்ரோலை விட கம்மி , அதே சமயம் மைலேஜும் டீசலில் தான் அதிகம், அப்படியிருக்க டீசல் தானே சிக்கனம்?

ஆனால் அப்படியில்லை.. நாம் டீசல் அடிக்கும் போது மட்டும் விலையை கவனிப்பதால் தான் இப்படி தோன்றுகிறது.. அதே சமயம், டீசல் கார் வாங்கும் போது நாம் கொடுக்கும் அதிகப்படியான தொகையை முக்கியமாக கவனிக்க வேண்டும்..

உதாரணத்திற்கு , இன்றைக்கு பெரும்பாலானவர்கள் வாங்க ஆசைப்படும் மாருதி SWIFT காரை எடுத்துக்கொள்வோம்..

இதில் பல வெரைட்டிகள் இருக்கின்றன, அதில் நாம் VXI(petrol) , VDI(diesel)  ஐ எடுத்துக்கொள்வோம்.

இரண்டுமே ஒரே கம்பெனி, ஒரே மாடல், ஒரே அம்சங்கள் கொண்டிருக்கின்றன.. பெட்ரோல் , டீசல் எஞ்சினை தவிர அனைத்துமே ஒன்று தான்..

இந்த காரின் on road விலைகளை பார்ப்போம்,

VXI (petrol) - rs. 5,85,000/-

VDI (diesel) - rs.7,16,000/-

இதன் விலை வித்தியாசம் ஒரு தோராயமாக பெட்ரோலை விட டீசல் 1,30,000/- அதிகம் வருகிறது..

சரி இருக்கட்டுமே, டீசல் விலை குறைவாக இருக்கும் போது, காரின் விலை அதிகம் வருவது சகஜம் தானே?
 ஒவ்வொரு தடவையும் டீசல் அடிக்கும் போது நிம்மதியாக அடிக்கலாம் என்று தான் பெரும்பாலனவர்கள் நினைக்கின்றனர்.. ஆனால் அது பெரும்பாலும் தவறு..

தினமும் காரிலேயே ஒரு நாள் கூட குறையாமல் 75கி.மீ க்கும் மேல் பயனம் செய்பவர்களுக்கு வேண்டுமானால் டீசல் சிக்கனமாக இருக்கலாம், ஆனால் தினசரி 75 கி.மீ.க்கும் குறைவாக ஓட்டுபவர்களுக்கு  அப்படி இல்லை..

அது எப்படி என்று பார்ப்போம்..

ஒரு காரை நாம் 5 வருடம் பயன்படுத்துகின்றோம் என்று வைத்துக்கொள்வோம்..
அந்த 5 வருடங்களுக்கு ஆகின்ற செலவுகளை பார்ப்போம்..

இந்த கணக்கு போடும் போது  முதலில் நாம் சரியாக முடிவெடுக்க வேண்டியது, வருடத்திற்கு மொத்தமாக எவ்வளவு கி.மீ. வண்டியை ஓட்டுவோம் என்பது தான்..
ஒரு தடவை 1000 கி.மீ. யும் பல தடவை 50கி.மீ. யும் ஓட்டினாலும் சரி..

பெட்ரோல் கார்:

முதலில் பெட்ரோல் காருக்கு ஆகும் செலவை பார்ப்போம்,

இந்த பெட்ரோல் மாருதி swift காரை பொருத்தவரையில் சராசரியாக இதன் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 16 k.m. கிடைக்கும் என்று சொல்லப்படுகின்றது.. கொஞ்சம் அதிகம் கிடைக்கலாம்..

இன்றைக்கு ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை  65 ரூபாய்..

நாம் ஒரு வருடத்திற்கு 10,000 கி.மீ. ஓட்டுவோம் என்று வைத்துக்கொள்வோம்..
அதாவது, மாதத்திற்கு 835 கி.மீ., தினமும் ஒரு நாள் கூட தவறாது எடுத்தால் 27 கி.மீ..

ஒரு வருடம் 10,000 கி.மீ. க்கு , இதன் மைலேஜ்  லிட்டருக்கு 16 கி.மீ கிடைக்கும் என்றால்,
10,000 / 16 = 625லிட்டர்

10,000 கி.மீ.க்கு ஆகும் பெட்ரோல் அளவு = 625 லிட்டர்..

ஆக, 625 லிட்டர் பெட்ரோலின் விலை 625 * 65 = rs.40625 ஒரு வருடத்திற்கு ஆகின்றது..

பெட்ரோல், டீசல் விலை மாற்றத்தை சரியாக கனக்கிட முடியாது என்பதால் இன்றைய மார்க்கெட் விலையையே 5 வருடத்திற்கும் கணக்கிட்டுக் கொள்வோம்..

5வருடம் * ரூ. 40,625 =  ரூ.2,03,125/- ( இதன் விலை மாற்றத்தால் வித்தியாசம் வரும் )

ஒரு தோராயமாக 5 வருடத்திற்கும் சேர்த்து ,50,000 கி.மீ க்கு ஓட்டினால் மொத்த பெட்ரோல் செலவு 2,03,125/- வருகின்றது

டீசல் கார்:

இந்த டீசல் மாருதி swift காரை பொருத்தவரையில் தோராயமாக(அதிகம்+குறைவு) சராசரியாக இதன் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 20 k.m. கிடைக்கும்.. இது பெட்ரோல் மைலேஜை விட 4 கி.மீ. அதிகம்..

இன்றைக்கு டீசலின் விலை - 56 ரூபாய்

நாம் ஒரு வருடத்திற்கு 10,000 கி.மீ. ஓட்டுவோம் என்று வைத்துக்கொள்வோம்..அதாவது தினமும் ஒரு நாள் கூட தவறாது எடுத்தால் 27 கி.மீ..

ஒரு வருடம் 10,000 கி.மீ. க்கு , இதன் மைலேஜ் 20 கி.மீ என்றால்,
10,000கி.மீ. / 20 = 500 லிட்டர்

10,000கி.மீ க்கு ஆகும் டீசல் அளவு = 500 லிட்டர்

ஆக, 500 லிட்டர் பெட்ரோலின் விலை 500லிட்டர்  * ரூ.56 = ரூ.28,000 ஒரு வருடத்திற்கு ஆகின்றது..

இதுவே 5 வருடம் , 50,000 கி.மீ என்றால் , டீசல் விலையை சரியாக கனக்கிட முடியாது என்பதால் இதையே வைத்துக்கொள்வோம்

5 வ்ருடம் * ரூ.28,000 =  ரூ.1,40,000

ஒரு தோராயமாக 5 வருடத்திற்கும் சேர்த்து ,50,000 கி.மீ க்கு மொத்த டீசல் செலவு 1,40,000/- வருகின்றது


ஆக , 50,000 கி.மீ. க்கு ஆகின்ற செலவு,

பெட்ரோல் காருக்கு - ரூ.2,03,125,
டீசல் காருக்கு - ரூ.1,40,000

இதில் 5 வருடங்கள், 50,000 கி.மீ ஓட்டுவதால் டீசல் காரால் நாம் மிச்சப்படுத்தும் தொகை தோராயமாக ரூ.63,000/-

டீசல் கார் ஓட்டுவதால் 63,000/- ரூபாய் 5 வருடம் கழித்து தான் மீதியாகிறது இது சிக்கனம் தானே என்றால் அது கிடையாது..

 ஏற்கனவே நாம் டீசல் கார் வாங்குவதால் 1,30,000/- ரூபாய் அதிகம் கொடுத்துள்ளோம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்..


வட்டி மற்றும் சர்வீஸ்:

அது மட்டும் பார்க்க கூடாது, அந்த தொகையை நான் பேங்கில் போட்டாலே 5 வருடத்திற்கு 10% வட்டி வந்தாலே வருடம் 13,000 வீதம் 5 வருடத்திற்கு 65,000 ரூபாய் அதில் மட்டுமே பெட்ரோல் காரால் மிச்சம் கிடைக்கின்றது என்பதையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும்..

அது போக , டீசலுக்கும் பெட்ரோலுக்கும் சர்வீஸ் செலவுகளில் கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட தொகை மீதம் பன்னலாம்.அதே சமயம் டீசல் காரை விட பெட்ரோல் காருக்கு சர்வீஸ் குறைவான தடவை விட்டாலே போதும்..

ஒரு தோராயமாக வருடத்திற்கு 3000-4000 வரை டீசல் காருக்கு அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.. இது வண்டி ஓட்டுவதை பொருத்தும் மாறுபடும்..

இதனால் நமக்கு 5 வருடம் பெட்ரோல் காருக்கு சர்வீஸால் மீதம் ஆகும் தொகை கிட்டதட்ட ரூ.20,000/-

ஆக, பெட்ரோல் கார் வாங்குவதால் மொத்தம் நமக்கு வட்டி மற்றும் சர்வீஸினால் மட்டுமே நமக்கு மீதம் ஆகும் தொகை ரு.85,000/-

 டீசல் காரால் நமக்கு மிச்சம் ஆகும் தொகையான 65,000 ஐ , பெட்ரோல் காரின் வட்டி மற்றும் சர்வீஸால் கிடைக்கும் தொகையை கழித்தால் கூட 20,000 மீதம்..

ஆக மொத்தம் நமக்கு பெட்ரோல் காரால் டீசல் காருடன் ஒப்பிடும் போது ஒட்டு மொத்தமாக ( வருடத்திற்கு 10,000 கி.மீ வீதம் 5 வருடத்திற்கு) மீதி ஆகும் தொகை 1,30,000+20,000 = 1,50,000/-

ரீ வேல்யூ:

இதில், பெட்ரோல் காரை விற்கும் போது ரீ வேல்யூ குறைந்தாலும் கூட நமக்கு அதிகபட்சம் நமக்கு 50,000 நஷ்டம்  வந்தாலும் கூட (டீசல் காருடன் ஒப்பிடும் போது ) அப்பொழுது கூட நமக்கு 1 லட்சம் பெட்ரோல் காரினால் நமக்கு மீதி தான்..


வருடத்திற்கு 20,000 கி.மீ ஓட்டினால்:

இதே கணக்குப்படி வருடத்திற்கு 20,000 கி.மீ.ஓட்டுவோம் என்று வைத்துக்கொள்வோம்... 5 வருடத்திற்கு 1,00,000 கி.மீ வரை ஓட்டினாலும்( தினமும் 55 கி.மீ) டீசல் காரல் நமக்கு மிச்சம் ரூ.1,26,000/-

அப்பவும் கூட, நமக்கு 4,000/- ரூபாய் பெட்ரோல் காருக்கு விலை வித்தியாசத்தில் மிச்சம்  + அத்துடன் ரூ.85,000 (வட்டி ,சர்வீஸ்களால் ) பெட்ரோல் கார்களால் மிச்சம் தான்..


பெட்ரோல் கார் நண்மைகள்:

அதே சமயம், நாம் வண்டி ஓட்டும் போது பெட்ரோல் கார்,டீசல் காரை விட சத்தம் குறைவாக இருக்கும், க்ளட்ச் டைட்டாக இருக்காது, வண்டி அதிராது , போன்ற பல நன்மைகள் இருக்கும் போது எதற்கு டீசல் கார் வாங்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்..

இன்றை நிலவரப்படி டீசலுக்கும் , பெட்ரோலுக்கும் விலை வித்தியாசம் வெறும் 9 ரூபாய் மட்டுமே இருக்கின்றது..


டீசல் கார் தேவைகள்:

சரி, பின் எதற்கு டீசல் கார் ? அதில் நன்மையே இல்லையா?

-சராசரியாக தினமும் 100 கி.மீ க்கும் மேல் ஓட்டுபவர்களுக்கு வேண்டுமானால் கொஞ்சம் மிச்சம் தான் .. ஆனால் இன்றைய டீசல் விலை ஏற்றத்தாலும் , டீசல் - பெட்ரோல் கார் விலை வித்தியாசம் அதிகமாக இருப்பதாலும் பெரிய அளவு ஒன்றும் மீதம் இல்லை என்பதே எனது கருத்து..

- ஒரு சில கார் கம்பெனிகளின் பெட்ரோல் கார் மாடல்களின் திறன் மோசமாக இருக்கலாம் , அந்த மாதிரி சூழ்நிலைகளில் வேறு வழியில்லாமல் டீசல் கார் வாங்கலாம்..

- ஒரே மாடல் பெட்ரோல் - டீசல் கார் விலைகளில் வித்தியாசம் ரூ.50,000/- க்கும் குறைவாக இருந்தால் டீசல் காரை யோசிக்கலாம்..


அதனால் காரை வாங்கும் போது டீசல் கார் நமக்கு தேவை தானா என்று நன்றாக யோசித்து வாங்கவும்..

இது முழுக்க எனது சொந்த கருத்து, இது முன் பின் வித்தியாசப்படலாம்...

- சுரேஷ் பாபு..




Sunday, December 21, 2014

கடலோர கவிதைகள்..





வணக்கம் நண்பர்களே,

இதற்கு முன் `சாளுக்கிய வம்சம்` பயணம் பற்றி பார்த்தோம்..

இந்த இடத்திற்கு செல்லும் முன் நாங்கள் இருவரும் ஈரோட்டிலிருந்து கேரளா,கர்நாடகா,கோவா கடற்கரை வழியாக செல்வதென்று முடிவெடுத்தோம்..

அதன்படி முதலில் ஈரோட்டிலிருந்து கோவை வழியாக பாலக்காடு,கோழிக்கோடு வழியாக முடிந்தளவு  கன்னூர் வரை செல்ல திட்டமிட்டோம்..

பாலக்காடு தாண்டியதுமே கேரளாவின் மலையும் மலை சார்ந்த இடம் ஆரம்பித்ததும் ஒரே மகிழ்ச்சியானோம்.. ஆனால் போக போக ரோடு மோசமாகி கொண்டே இருந்தது வண்டி ஓட்டுவது சிரமத்தை கொடுத்தது.. பெரிய ஊர்கள் கூட அங்கே பசுமையாக இருந்தது அழகு..


கோழிக்கோடு:








கோழிக்கோடு - கன்னூர் வழி:






கடைசியில் தலச்சேரியை வரையே செல்ல முடிந்தது..இரவு அங்கேயே தங்கி விட்டோம்..



முழப்பிலங்காடு பீச்:


காலையில் அங்கிருந்து கண்ணூர் செல்லும் வழியில் `முழப்பிலங்காடு பீச்` என்ற இடத்திற்கு சென்றோம்.. இந்த பீச்சின் ஓரம் கிட்டதட்ட 20கி.மீ. கன்னூர் வரையில் கடற்கரையிலேயே  நாமே வண்டிகளை ஓட்டிச்செல்லலாம் என்பது இந்த பீச்சின் சிறப்பு..














முதலில் கடற்கரை வழியாகவே செல்லலாம் என்று முடிவெடுத்து கிளம்பினோம்.. சிறிது தூரம் சென்றதும் எங்களுக்கு முன்னர் சென்ற ஒரு கார் பீச் மணலில் சிக்கியிருப்பதை பார்த்ததும் எதற்கு வம்பு என்று பேசாமல் ரோடு வழியில் சென்றோம்..

கொஞ்ச நேரத்திற்கு இந்த கடற்கரை நன்றாக இருந்தது, பின்னர் பழகியதும் பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை.. ஆனால் , இந்த வழியாக செல்வோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பீச்.. ஒரு தடவை செல்லலாம்..

அடுத்து கன்னூர் தாண்டிய பின்  `வழியபரம்பு` என்ற செயற்கை தீவு ஒன்று இருப்பதாக சொன்னதை கேட்டு தேடி சென்றோம்.. விடுமுறை நாள் என்பதால் போகிற வழியில்  கேரளா மக்கள் பெரும்பாலானோர் சிறு ஆற்றில் பாலங்களின் மேல் ஏறி குதித்து விடுமுறையை கொன்டாடிக்கொண்டிருந்தனர்..
















வழியபரம்பு தீவு:








ஆனால் விளம்பரம் செய்யப்பட்ட அளவிற்கு இந்த தீவு ஒன்றும் பெரிதாக இல்லை.. கடலோர backwater தேக்கத்தின் குறுக்கே ஒரு பாலம் மாதிரி போட்டு ஒரு குட்டி (ரொம்ப குட்டி) தீவு மாதிரி ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்..





மற்றபடி தேடி போய் பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை..

ஆனால் இதை தேடி நாங்கள் சென்ற பாதை யாவும் கிராமம் கிராமமாக இருந்ததால் போகின்ற வழி அனைத்தும் கேரளாவின் கடலோர கிராம அழகை கண்டோம்..



பேகல் கோட்டை (BEKAL FORT):

பின்னர் அங்கிருந்து போகிற வழியில் காசர்கோடு கடற்கரை ,அருகே பேகல்(bekal fort) கோட்டைக்கு சென்றோம்..












பம்பாய் படத்தில் வரும் `உயிரே உயிரே` பாடல் தலம் பெற்ற இடம் தான் இந்த பேகல் கோட்டை..

 நாங்கள் சென்ற நேரம் மாலை ஆகிவிட்டதால் வெயில் இறங்கிக்கொண்டிருந்தால் கடற்கரை அருகே கண் நன்றாக கூசியது.. சிறிது நேரம் அங்கே சுற்றி பார்த்து விட்டு சீக்கிரம் மங்களூர் இருட்டிற்குள் தாண்ட வேண்டும் என்று வண்டியை எடுத்தோம்..


 கர்நாடகா:

ஒரு வழியாக கேரளாவின் மோசமான ரோடுகளை தாண்டி கர்நாடகாவை தொட்டோம்.. இங்கிருந்து ரோடுகள் நன்றாக இருந்தது..

மங்களூருக்கு சற்று  நேரமே வந்து விட்டதால், மேலும் பயணம் செய்ய நேரம் இருந்ததால், உடுப்பி வரை செல்ல தீர்மானித்தோம்.. இரவு 10 மணி அளவில் உடுப்பி வந்தடைந்தோம்..

அங்கேயே தங்கி,காலையில் கிருஷ்ணர் கோவில் செல்ல முடிவெடுத்தோம்..


உடுப்பி:





காலையில் நாங்கள் தங்கிய விடுதிக்கு அருகேயே கிருஷ்ணர் கோவில் இருந்ததால் அங்கே நடந்து சென்றோம்..நான் சிறு வயதில் அனேகமாக 1987 ல் சென்ற ஞாபகம் கொஞ்சம் கொஞ்சம் நினைவுகளை கிளறியது.. கோவிலுக்கு சென்று தரிசித்து விட்டு கோவாவை தொட்டு விட வேண்டும் என்ற முனைப்புடன் கிளம்பினோம்..


கொல்லூர் மூகாம்பிகை கோவில்:

போகிற வழியில் தான் கொல்லூர் மூகாம்பிகை கோவில் இருந்ததால் அங்கேயும் சென்று விட முடிவெடுத்து கிளம்பினோம்..ரோடும் நன்றாக் இருந்ததால் ட்ரைவிங்கும் நன்றாக இருந்தது..






மூகாம்பிகை கோவிலுக்கு சென்று தரிசித்துவிட்டு மதிய உணவு கோவிலில் சாப்பிட்டோம்.. சாப்பாடு உண்மையில் மிக அருமை..குறிப்பாக ரசம் சூப்பரோ சூப்பர்.. கோவிலுக்கு செல்வோர்கள் கண்டிப்பாக உணவருந்தாமல் வரவேண்டாம்..

இங்கே போட்டோ எடுக்க கூடாது என்பதால் படம் எடுக்க முடியவில்லை..

மூகாம்பிகை - முருதேஷ்வரர் செல்லும் வழி:


இங்கிருந்து மங்களூர் செல்லும் வழியில் `மரவந்தி` என்ற பீச் இருப்பதாக கூறினார்கள்..இதன் சிறப்பு என்னவென்றால், ரோட்டின் ஒரு பக்கம் கடலும் மறுபக்கம் ஆறும் ஒரு சேர இருக்கும்.. ஆனால் நேரம் போதாமையால் அங்கே செல்ல முடியவில்லை..

எனவே,மீண்டும் காட்டு வழியே தான் செல்ல வேண்டும் என்பதால் அங்கே இருந்த கிராமங்கள் வழியாகவே `முருதேஷ்வரர்` கோவிலுக்கு கிளம்பினோம்..









முருதேஷ்வரர் கோவில்:

கடற்கரை ஓரம் அமைந்திருக்கின்ற `முருதேஷ்வரர்` கோவிலுக்கு செல்ல முடிவெடுத்தோம்.. தூரத்தில் இருந்தே கோவில் கோபுரம் பெரிதாக தெரிந்தது கண்டு கொஞ்சம் excite ஆனோம்.. ஆனால்,























முருதேஷ்வரர் கோவில் கடற்கரையிலே கட்டியிருக்கின்றார்கள்.. இங்கே மிகப்பெரிய சிவன் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.. அதே சமயம் கோபுரமும் சற்று பெரிதாக கட்டியிருக்கிறார்கள்..

ஆனால் பராமரிப்பு மிகவும் மோசமாக இருந்தது.. குறிப்பாக கோபுரம் முழுக்க சிமெண்ட்டிலேயே கட்டியிருக்கிறார்கள்.இதனாலேயே கோபுரம் அங்கங்கே பழுதாகி இருந்தது.. அதில் நாம் மேலே சென்று பார்ப்பதற்காக லிப்ட் வசதியும் அமைத்திருக்கிறார்கள்.. ஆனால் கோபுரம் முழுக்க சிமென்ட் என்பதால் பழுதடைந்து கொண்டே இருக்கின்றது.. லிப்டில் மேலே சென்று பார்ப்பதற்கு வேண்டுமானால் கொஞ்சம் நன்றாக இருந்தது..ஆனால் மாலை வெயில் அதிகமாக இருந்ததால் பெரிதாக ரசிக்க முடியவில்லை..

இதன் பிரம்மாண்டத்தை போட்டோவில் பார்த்த அளவு நேரில் ஈர்க்கவில்லை.. ஒரு தடவை போகிற வழியில் இருப்பதால் வேண்டுமானால் சென்று பார்க்கலாம்.. மற்றபடி இதற்காக மட்டும் போகத் தேவையில்லை என்பது எனது கருத்து..

கார்வார் (KARWAR):


பின்பு அருகில் உள்ள `கோகர்னா` பீச் செல்ல முடிவெடுத்தோம், நேரம் ரொம்பவும் ஆகிவிட்டதால் அங்கே செல்ல முடியாமல் நேராக கர்நாடகா - கோவா பார்டரான கார்வார்(karwar) சென்றடைந்தோம்..போகிற வழிகளில் ரோடுகள் வேலையாகி கொண்டிருந்ததால் மெதுவாகவே சென்றோம்..
அங்கங்கே இருந்த சிறு ஆறுகள் எல்லாம் அழகு..

 இரவில் கார்வாரில் தங்கினோம்..










இந்த ஊர் கோவா பார்டர் என்பதால் டூரிஸ்ட்டுகளும் அதிகமாக இருந்தனர்..

காலையில் அருகில் இருந்த பீச்சிற்கு சென்றோம் , கொன்சம் நன்றாக இருந்தது.. அதே சமயம் ரொம்பவும் plain ஆக இல்லாமல் மலைகள் சுற்றி இருந்தது சற்று அழகாக இருந்தது..

இதன் அருகில் இரண்டு குட்டி தீவுகள் இருப்பதாக கேள்விபட்டிருந்தோம்..ஆனால் கடற்கரைகள் எங்களுக்கு சற்று போரடிக்க ஆரம்பித்ததால், நேரமும் ஆகிவிட்டதால் கோவா சென்றடைவதற்காக வண்டியை கிளப்பி கோவா சென்றோம்..












கோவா பற்றி மீண்டும் அடுத்த பதிவில் பார்ப்போம்..

அன்புடன்
சுரேஷ் பாபு, 
சரவணமூர்த்தி..
























































































Monday, October 27, 2014

சாலுக்கிய வம்சம்...





பாதாமி , பட்டாடக்கல்லு , அய்ஹோலே..(BADAMI,PATTADAKKAL,, AIHOLE)










கர்நாடக மாநிலம் முழுக்கவே பல்வேறு சிற்பக்கலைகள் ,குகைகள் கொண்ட கோவில்கள் மிக அதிகம்.. இதில் சாலுக்கிய மன்னர்கள்களின் ராஜ்ஜியத்தின் தலைநகரமான பாதாமி , பட்டாடக்கல்லு , அய்ஹோலே போன்ற ஊர்கள் மிக அருமை..இதில் சிறப்பு என்னவென்றால் இது 5 முதல்-8ம் நூற்றாண்டுகளில் வம்சாவளிகளாக கட்டப்பட்டதாகும்..

முதலில் நாங்கள் சென்ற பாதாமி(பதாமி) ஐ பார்ப்போம்..

திராவிடர் கலை நுட்பத்துடன் கட்டப்பட்ட குகை கோவில்கள் கொண்ட நகரம்.. இந்த சிறு நகரம் முழுக்க பாதாம் நிறத்தில்( கரடுமுரடான standstone பாறைகள் நிறைந்து இருப்பதால் இந்த ஊருக்கு பாதாமி என்று பெயர் வந்ததாக கூறுகிறார்கள்..பதாமி என்றும் கூறுகிறார்கள்..

இந்த குகை கோவில் சிற்பங்கள், சாலுக்கிய மன்னன், புலிகேசி -1 கி.பி.543ம் ஆண்டு பாதாமிக்கு தலைநகரத்தை மாற்றிய போதிலிருந்து அமைக்கப்பட்டுள்ளன.. இந்த குகை கோவில்களை அவர்கள் உருவாக்கியது, இயற்கையாகவே தென்னகத்தில் இருந்த படை எடுத்து வந்த பல்லவ நாட்டு எதிரிகளிடம் இருந்து காத்து கொள்ள அமைந்தது சிறப்பாகும்..

மிகப்பெரிய  sandstone மலையை ,மிக எளிய பொருட்களை கொண்டு குடைந்து சிற்பங்களை அமைத்துள்ளது மிக அற்புதம்..இதில் standstone என்பது சற்று sensitive ஆன கற்களாகும்.. இதை சற்று வேகமாகவோ,தவறாகவோ செதுக்கினால்,கல் இரண்டாக உடைந்து போக வாய்ப்புகள் அதிகம்.. இவ்வளவு சிக்கல்கள் இருந்தும் அங்கிருக்கும் சிற்பங்கள் , தூண்கள் மற்றும் குடைந்தெடுத்த குகைக்குள் அமைக்கப்பட்டிருப்பது மிக அழகு.. மொத்தம் 4 குகை கோவில்கள் அருகருகே இருக்கின்றது.. இதில் மேல் ஏறுவது சிரமம் ஏதுமில்லை..ஆபத்தும் இல்லை.. யார் வேண்டுமானாலும் சென்று வரலாம்..

கீழே ஒரு அகஸ்த்தியர் தீர்த்தக்குளமும் , அதில் பழங்கால புத்தநாதர் கோவிலும் அமைந்திருக்கின்றன.. இதை மேலிருந்து பார்த்தால்,பச்சை நிற குளத்தில் இருப்பது மிக அழகாக இருக்கின்றது..

குகைக்கு மேலே 18ம் நூற்றாண்டுகளில் திப்பு சுல்தான் அமைத்த கோட்டை இருக்கின்றது..ஆனால் மேலே சென்று வருவது சிரமம் என்பதால் நாங்கள் செல்லவில்லை..

இந்த ஊருக்குள் நுழையும் போதே அங்கிருக்கும் பிரம்மாண்ட பாறைகள் , சந்து சந்தாக குறுகிய பாதைகள் கொண்ட தெருக்கள் , மிக பழமையான வீடுகள் , தொழில்நுட்பங்கள் பெரிதாக இல்லாத பழங்கால கிராம வாழ்க்கை , இவற்றையெல்லாம் பார்க்கும் போது நமது எண்ணங்கள் , கற்பனைகள் பின்னோக்கி  பயனிக்கும் என்பதில் சந்தேகமில்லை..


தகவல்கள்:

நாங்கள் சுற்றி பார்த்த வரையில் ரோடுகள் இந்த ஏரியாவை பொறுத்தவரையில் மோசமே.. எங்கேயும் வழிகாட்டிகள் கிடையாது.. சுற்றியும் 1960 களில் பார்ப்பது போன்ற பழைய கிராமங்களே இருக்கின்றன..நாங்கள் பாதாமிக்கு வந்து சேர இருட்டி விட்டது , கிட்டதட்ட 20-30kmக்கு ஆள் நடமாட்டமே இல்லை.. பயணமும் சற்று த்ரில்லிங்காக இருந்தது..

அங்கிருக்கும் கிராம மக்களும் பழமை மாறாமல் மராத்தி மக்களை போல் உடை அனிந்து இருக்கின்றனர்..அங்கே மராட்டி மொழியே அதிகம் பேசப்படுகின்றது...இவை அனைத்தும் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது..

பதாமி நகரத்தை தவிர எங்கேயும் பெரிய வீடு என்று ஒன்று கூட இல்லை..அனைத்தும் சிறிய வீடுகளே..தொழில்கள் எதுவும் சிறப்பாக இருப்பதாக தெரியவில்லை , விவசாயம்(வெங்காயம் , கம்பு , சோளம் , ராகி, செவ்வந்தி பூ), எருமை மாடு மேய்பது மட்டுமே அதிகம் தெரிந்தது..

கோவில்,குகைகளை அரசாங்கம் சுத்தமாகவே வைத்துள்ளது.. இருந்தாலும் செல்லும் வழியெல்லாம் மிகக்குறுகிய ரோடுகள் , அசுத்தமானவையாக இருக்கின்றன..

இந்த மூன்று ஊர்களையும் ஒரே நாளில் பார்த்து முடிக்கலாம்.. சிற்பக்கலை , வரலாற்றில் விருப்பம் அதிகம் இருப்பவர்கள் கண்டிப்பாக ஒரு நாள் தங்கியிருந்து பார்க்கலாம்..

இந்த ஊர்கள் 30 கி.மி. சுற்றலவில் இருக்கின்றன..

இந்த ஊர்களுக்கு செல்லும் போது பதாமி யில் மட்டுமே தங்க முடியும்.. மற்ற இரண்டு ஊர்களில் எந்த வசதியும் இல்லை... உணவகங்கள் கூட பதாமியில் மட்டும் தான் உள்ளது.. மற்றபடி ஏதாவது தேவையென்றால் பதாமியிலேயே வாங்கிக்கவும்.. இல்லையென்றால் சிரமம் தான்..

விடுதிகளை பொறுத்தவரையில் இரண்டு மூன்று சுமாரானவை இருக்கின்றன.. ஒரு சில பெரிய ஹோட்டல்களும் இருக்கின்றன..ஆனால்,அவைகள் சற்று outer ல் உள்ளாதால் முடிந்தளவு நேரமாகவே சென்று விடுவது நல்லது..

இந்த இடங்களுக்கு சென்று வர நினைப்பவர்கள் கூடவே hampi ஐயும் வரும் போது பார்த்துவிட்டு வருவது சிறந்தது..

இந்த இடங்கள பெங்களூருவிலிருந்து வடக்கே 513 கி.மி.கள் வரும்.. பதாமியிலிருந்து ஹம்பிக்கு(பெங்களூர் வழி) கிட்டதட்ட 120 கி.மி. வரும்..

பெங்களூரிலிருந்து ஒரு ரயில் பதாமிக்கு செல்கிறது.( golgumbaz express)

இவ்விடங்களை வாகனங்கள் இருந்தால் நாமே சென்று பார்த்து வரலாம்.. இருந்தாலும் கைடுகள் வைத்துக்கொள்வது சிறந்தது..

இங்கே கொசுக்களை விட கோவில்களே அதிகம்..





பாதாமி செல்லும் வழியில் எடுத்த படங்கள்... 





(நாக்கு வெளியே தள்ளும் மாடுகள்)




அந்த ஏரியா முழுக்கவே ஆடு , மாடு மேய்பவர்கள் மிக அதிகம்..








 மாட்டு வண்டிகளும் பரவலாக அதிகம்






மேரி கோல்டு , செவ்வந்தி ,போன்ற மலர்கள் அதிகம் பயிரடப்பட்டிருக்கின்றன்







இரவில் பஸ் இல்லாத கிராமத்தில் இருந்து பதாமிக்கு ஒன்றாக அடைந்து செல்லும் மக்கள்


கிட்டதட்ட 20-30 kilometerக்கு ஆள் நடமாட்டமில்லாத ரோடு..



பதாமி நகரம் சுற்றிலும் பாறைகள்,மலைகள் , கோவில்கள்



பதாமி முதல் குகை




குகைக்கு மேலே திப்பு சுல்தான் கட்டிய கோட்டை..







பெரிய தூண்களில் உள்ள சிற்பங்கள்










குகைக்குள் இருந்து எடுத்த படம்


மூன்றாம் குகைக்கு செல்லும்  வழி..



பதாமி நகரத்தின் MONKEY`s EYE VIEW











பாதாம் நிறத்தில் பாறைகள்






அந்த காலத்தில் விளையாடிய பல்லாங்குழி, கல்லிலேயே அமைத்துள்ளனர்..













மிக குறுகிய தெருக்கள்.. குறுக்கே வண்டிய போட்டால் எப்படி போவது?



அகஸ்த்தியர் தீர்த்த குளமும் , கோவிலும்..















பதாமி தெருக்கள்





பதாமி குகை முழுவதும் குரங்குகள் ஆதிக்கம்.. ஒரு போட்டோ எடுக்க நான் பட்ட பாடு..








பட்டாடக்கல்லு(PATTADAKKAL)..

அடுத்து நாங்கள் சென்றது `பட்டாடக்கல்லு`...

இது பதாமியிலிருந்து 18 k.m. தூரத்தில் இருக்கின்றது.. `பட்டாபிஷேக கல்என்பதையே பட்டாடக்கல்லு என்றழைக்கப்படுகின்றது..

இங்கே தான் அரசர்களுக்கு பட்டாபிஷேக, முடி சூட்டு விழா நடந்திருப்பதால் இந்த பெயர் அமைந்ததாக கூறுகிறார்கள்..

இங்கே ஒரே இடத்தில் 8 கோவில்கள் அமைந்துள்ளன..

பதாமியில் உள்ள சிற்பக்கலையை போல, அவர்களுக்கு அடுத்து வந்த அரச தலைமுறைகள், எப்படி புதுமையை புகுத்தியிருக்கின்றார்கள் என்பதற்கு இந்த கோவில்களே சான்று.. இந்த கோவில்கள் தென்னிந்திய திராவிட முறையிலும் , வட இந்திய நகரர் முறையிலும் அமைக்கப்பட்டிருக்கின்றது..

இந்த கோவிலை சாலுக்கிய மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்யனின் மனைவிகள் இருவரும் (சகோதரிகள்) சேர்ந்து கி.பி 745ல்போரில் வெற்றி பெற்றதற்கு கெளரவிப்பதற்காக கட்டியதாக கூறுகின்றனர்..

இந்த இடம் பதாமியை விட வேறுபட்டு அமைந்திருந்தது.. ஒரு பக்கம் நமது கோவில் கோபுரங்களை போலவும் , மறு பக்கம் ஒரிசாவில் உள்ள கோவிலகளை போலவும் ஒரு சேர அமைந்திருந்தது மிக அழகாக இருந்தது..

உறுதியான தூண்களும் , அதில் அமைந்திருக்கின்ற சிற்பங்கள் ராமாயண , மகாபாரத புராணங்களை ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவும் உயிரோட்டமாக இருந்திருப்பதை பார்க்கலாம்.

மற்றொரு தூணில்ஒரு பெண் தனது காதலனுக்கு கடிதம் எழுதியதற்காக யானையின் காலடியில் தூக்கி வீசியெறிப்பட்ட சம்பவத்தையும் வடிவமைத்துள்ளனர்..

அதே சமயம்,  கன்னட மொழியின் எழுத்து வடிவிலும் சுவர்களில் செதுக்கியுள்ளனர்..அதில் போர் காலங்களில் இக்கோவில்கள் கட்டப்பட்டதற்காக சன்மானங்களாக தரப்பட்ட தாசிகளை பற்றிய குறிப்புகள் இருக்கின்றன..

இவற்றை பார்க்கும் போது , அந்தக்காலங்களில் கலையும் , மூர்க்கத்தனங்களும் ஒரு சேர அமைந்திருப்பதை சிற்பங்களின் மூலம் அறியலாம்..

அவர்கள் கட்டிய கோவிலுக்கு முன்னே மிகப்பெரிய நந்தி சிலை ஒன்று கருப்பு கிரானைட் கல்லில் உள்ளது... பல படையெடுப்புகள்,கொள்ளைகளுக்கு பிறகு இன்னமும் பளபளப்பாக அழகாக இருப்பது இந்த நந்தி சிலையின் சிறப்பு...

தகவல்கள்:

1. பட்டாடக்கல்லு ஒரு UNESCO world heritage site ஆகும்..

2. இது பதாமிக்கும் , அய்ஹோலேவுக்கும் நடுவில் இருக்கின்றது..

3. இது முழுக்க முழுக்க கிராமத்தில் அமைந்திருக்கின்றது.. இங்கு தங்குவதற்க்கோ , வாங்குவதற்கோ ஒன்றும் இல்லை..ஆனால் மிக அழகாக பராமரிக்கின்றார்கள்..


பட்டாடாக்கல்லு படங்கள்:


விவசாயி..










எங்கே செல்லும் இந்த பாதை?? வழிகாட்டி இல்லாமல் தடுமாறிய போது..


அப்பாடா ஒருத்தர் வர்றார்.. அவரை கேட்போம்..


வட இந்திய `நகர` அமைப்பில் கோபுரம்..



தென் இந்தியாவின் `திராவிட` மற்றும் வட இந்திய `நகர` அமைப்பில் கோபுரங்கள்


கற்களின் வண்ணங்கள் மிக அழகு..





6ம் நூற்றாண்டிலிருந்து இன்னமும் பளபளக்கும் பெரிய `கிரானைட்` நந்தி சிலை..









சிதிலமடைந்த நந்தி சிலை..






ஒவ்வொரு தூண்களிலும் கதை சொல்லும் அருமையான சிற்பங்கள்



ஒரு கையுடன் பட்ங்களை வரையும் நபர்..





 









மிரட்டும் பஸ் மற்றும் ரோடு..


டேய்...யாருகிட்ட போட்டோ புடிக்கிற..


பழங்காலத்து வீடுகள் மட்டுமே அங்கே இருப்பதும் அருமை..









பாதாமியை விட்டால் மற்ற ஊர்களில் இந்த மாதிரி தான் சாப்பாடு.. ரெடியா?

தம்பி.. காரம் கொஞ்சம் கம்மியா போட்டுட்ட..



 அய்ஹோலே(AIHOLE):

அடுத்து நாங்கள் சென்றது அய்ஹோலே.. இது பட்டாடக்கல்லிலிருந்து 20km வரும்.. இதுவும் கிராமங்களிலேயே அமைந்திருக்கின்றன..

இது சாலுக்கிய மன்னர்களின் முதல் தலைநகரமாகும்..அதற்கு சான்றாக இந்த ஊரை சுற்றியும் 100க்கும் மேற்பட்ட கோவில்கள் கட்டப்பட்டிருக்கின்றன..

பதாமி , மற்றும் பட்டாடக்கல்லு ஆகியவற்றை பார்த்த பிறகு மீண்டும் அதே மாதிரியான கோவில் சிற்பங்களை திகட்டும் அளவுக்கு ஒரே நாளில் பார்த்ததால் சற்று சலிப்பாக போய்விட்டது.. இருந்தாலும் பார்க்காமல் போக கூடாது என்பதற்காக ஒரே முடிவாக இதையும் பார்த்துவிடுவோம் என்று சென்றடைந்தோம்..

அங்கே 100 கோவில்களெல்லாம பார்க்க முடியாது என்பதால் முக்கியமான அங்கே உள்ள துர்கா கோவிலை மட்டும் பார்க்க சென்றோம்.. இந்த கோவில் சிறியதாக இருந்தாலும் , இதன் வடிவம் அரை வட்ட வடிவமாக(semi circular shape) இருந்தது அழகு.. இந்த கோவிலில் உள்ளே கற்கலாலேயே மேல் தூண்களும் , மேல் சுவற்றில் உள்ள கற்சிற்பங்களும் அழகு..



ஒரு பழங்குடி இனத்து மூதாட்டி..


செல்லும் வழியில்










மேற்கூறையில் உள்ள தூண்களில் அமைந்த சிற்பங்கள்..








இங்கே ஜன்னல் கூட கற்களில்,சிற்பங்களும் தான்..




ஃபேஸ்புக் ,ட்விட்டர் இண்டர்நெட் இல்லாமல் சந்தோசமாக குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் ஒரு விவசாய குடும்பம்..






ஆடு மாதிரியே இருக்கும் மாடுகள்..


பள்ளிக்கு சென்றாலும் கடமையை செய்வோம் நாங்கள்..



சிதிலமடைந்த வீடுகள் இங்கே அதிகம் காணப்படுகின்றன..

இங்கே கிட்டதட்ட அனைத்து வீடுகளிலும் மாடு வளர்ப்பு உண்டு..அதை தாண்டி தான் வீட்டுக்குள் செல்ல முடியும்..


கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் ஒன்றுமில்லை..


மதிய உறக்கம்..





பழங்காலத்து கதவுகள் கொண்ட கடைகள்..













இதற்கு மேல் சற்று நேரம் ஆகிவிட்டதால் முந்தைய நாள் இரவு கொடுத்த அனுபவம் காரணமாக நேரமாக ஹம்பி செல்வதற்காக நீங்கா நினைவுகளுடன் ஹம்பிக்கு கிளம்பினோம்..

அன்புடன்
சுரேஷ் பாபு , சரவணமூர்த்தி..
(ஈரோடு)